08/05/2014
இந்தியத் தேயிலை[தொகு]
இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும்.
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் புவியியல் ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.
இமயமலையின் பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை டார்ஜிலிங் தேயிலையாகும். இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண்வளம் மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் டார்ஜிலிங் தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும். டார்ஜிலிங் தேயிலையைப் போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர். இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை ருஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, போலந்து, ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.