Venkatesh / Artist

Venkatesh / Artist செய்வன திருந்தச் செய்

“வெங்கி ரு(ர)சிக்கிறான்”3. சாம்பார் சாதம்சாம்பார் சாதம் எனில் அதை இரண்டு வகையாக இல்லை 3 வகைகளாகப் பிரிக்கலாம்! கோல்கேட் ...
07/05/2023

“வெங்கி ரு(ர)சிக்கிறான்”

3. சாம்பார் சாதம்

சாம்பார் சாதம் எனில் அதை இரண்டு வகையாக இல்லை 3 வகைகளாகப் பிரிக்கலாம்! கோல்கேட் டூத் பேஸ்ட்டின் விளம்பர பாணியில் சொல்வது எனில், ஒன்று(டொயாங்) சூடான சோற்றில் சாம்பார் ஊற்றி பிசைந்து சாப்பிடுவது, இரண்டு (டொயாங்) ரெடிமேடாக செய்த சாம்பார் சாத வகைகள், மூன்று (டொயாங்) பிஸிபேளாபாத் போன்ற அந்நிய மாநிலத்து சாம்பார் சாதங்கள்!

1 சூடான சாதத்தில் சாம்பார் ஊற்றி பிசைந்து சாப்பிடும் முறை! சாம்பாருக்கு மட்டுமே குழைந்த சோறோ விறைத்த சோறோ ஆகாது! நன்கு வெந்து விறைப்பிற்கும் குழைவிற்கும் இடையே உள்ள நல்ல பதத்தில் சோறு வெந்திருக்கணும்! ரெண்டாவது சோற்றில் ஊற்றும் சாம்பார் நல்ல டெக்ஸ்ச்சரில் இருக்கணும்! அதாவது பருக்கள் போல பருப்புகள் தனியே தெரியாது..

இன்பாக்ஸில் வழிவது போல சாம்பாரில் பருப்பு குழைந்து கலந்து இருக்கணும். காய்கள் நன்கு வெந்து இருப்பது மிக மிக முக்கியம். அவரையோ, செளசெளவோ, பூசணியோ கையால் தொட்டாலே அப்படியே உதிரணும் சாம்பாரில் உப்பு காரம் சரியா இருக்கணும்! அதிலும் சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு 1 கரண்டி சாம்பார் ஊற்றினால் போதும் என்கிற..

இடத்தில் கர்ண மகராஜனைப் போல் ஒன்றரைக் கரண்டி ஊற்றி சோற்றை பிசைவது உயரிய பண்புகளில் ஒன்றாகும்! அதிலும் உருளைக் கிழங்கு காரக்கறி, வாழைக்காய் வறுவல் போன்ற கார கூட்டுகள் என்றால் ஒவ்வொரு உருண்டை சோற்றிற்கும் அதை கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து உண்பது சிறப்பு! அனுமன் போல அப்பளம் நிச்சயமாக சாம்பாருடன் இருந்தே ஆகணும்!

முட்டைகோஸ் பொரியல், காரட் பொரியல், அவியல், உசிலி, தக்காளி கூட்டு, புளி தொக்கு, வடகம், ஊறுகாய் இப்படி எதுவும் செட்டாவது சாம்பார் சாதத்திற்கு மட்டும் தான். சின்ன வெங்காய சாம்பார்களில் வெங்காயத்தை தூக்கி போட்டுவிட்டு சாப்பிடும் மூடர்களுக்கு வாழும் போதே நரகம் உறுதி! சாம்பாரில் போட்ட கறிவேப்பிலையை கூட விடக்கூடாது! அதிலும் வாசனைக்கு..

பெருங்காயம் போட்ட சாம்பார் எல்லாம் தெய்வ லெவலாகும்! நீங்க பீன்ஸ் பொரியல், எண்ணெய் கத்திரிக்காய் வறுவலோடு சூடான சோற்றில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அவரைக் காய் சாம்பார் ஊற்றி சாப்பிட்டு இருக்கிங்களா? அதிலும் வடகம் அப்பளம் கூட வச்சி சாப்பிட்டா மட்டன் பிரியாணி எல்லாம் அதுக்கு முன்னாடி ஈடாகுமா சார்! அதே போல தக்காளி வெண்டைக் கூட்டும்..

அவியல், சேனை வறுவல், சோயா உருளை பால்கறி, புளிக்கறி இதோடு பூசணிக்காய் சாம்பார் சாப்பிடுவதும் சுவர்க்கம். சிவப்பு பூசணிக்காய் சாம்பாருக்கு உருளை, சேனை காரக்கறி மாங்காய் தொக்கு ஊறுகாய் இருந்தா சட்டி சோறு இறங்கும்! இதில் நெய் ஊற்றாது செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஊற்றுவது சிறப்பு! வடை, போண்டா, முறுக்கு, மிக்ஸர், போன்ற பலகாரங்களும்..

சாம்பாருக்கு நல்ல நண்பர்களே! அசைவப் பிரியர்கள் ஆம்லெட், முட்டை பொரியல், முட்டை மசாலா, போன்லெஸ், சிக்கன் 65, மட்டன் சுக்கா, ஈரல் வறுவல், நெஞ்சு சாப்ஸ், மீன் வறுவல் என காரமாக வெரைட்டியாக தொடு கறிகளை வைத்து சாம்பார் சாதத்தை நன்கு ரசித்து உண்ணலாம்! சோற்றில் ஊற்றி பிசைவது இப்படின்னா ரெடிமேடான இரண்டாவது சாம்பார் சாதத்திற்கு?!

இவை குழைவாக வெந்த சோற்றில் செய்யப்படுவது! சாம்பாரில் எத்தனை வகை காய்களை போட முடியுமோ அத்தனையும் போட்டு செய்திருப்பார்கள்! பெரும்பாலும் ஸ்பூனில் உண்ணும் உணவு இது இதற்கும் மேற்கூறிய அனைத்து கூட்டு பொரியல்கள், அசைவ கறிவகைகள், முட்டை வகைகள், ஊறுகாய்கள், சிறப்பாக இருக்கும்! ஆனால் கையில் பிசைந்த சாம்பார் ருசி இதில் வராது!

மூன்றாவது பிஸிபேளா பாத்! இதில் பட்டை மசாலா, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து இருப்பதால் சூடாக ஒரு ஸ்பூன் அள்ளி ருசித்தாலே கன்னக் கதுப்புகள் இரண்டிலும் காரம் அனலாகத் தெரியும்! இதற்கு காராபூந்தி ஒரு நல்ல காம்போவாகும்! கொதிக்கக் கொதிக்க இதை ஒரு வாய் ஸ்பூனில் அள்ளி க்ரிஸ்பியான காராபூந்தியோடு விழுங்குவது இன்பமயமாகும்!

இந்த காரத்திற்கு தயிர்வடை அல்லது தயிர்/டாங்கர் பச்சடி சிறந்த குளு குளு இணையாகும்! அதிலும் சேமியா பிஸிபேளா கிடைத்தால் மொறு மொறுன்னு சூடா ஒரு உளுந்தவடை சேர்த்து உண்பது சிறப்பு! ஓமப்பொடி,காராசேவு, பட்டர் முறுக்கு, இவை எல்லாம் பிஸிபேளாபாத்தின் டீம்மேட்ஸ்! கோடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் சோற்றில் ஊற்றி சாப்பிடும் சாம்பாரே பிராட்மேன்!

07/05/2023

“மே தினத்தில் ‘மே’ பிரியாணி”

மே 1ஆம் தேதி அலுவலகம் விடுமுறை என்றாலும் திண்டுக்கல்லில் ஒரு ஈவண்ட்! வேறு எந்த ஊர் என்றாலும் விடுமுறையை விட்டுத் தராத நான் திண்டுக்கல் என்றதும் அதை விட்டுக் கொடுத்தது அந்த திண்டுக்கல் பிரியாணிக்கு தான் என்பதை கிபி3023இல் பிறக்கும் குழந்தைகளும் அறிவார்களே! மேலும் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் கடந்த 20 நாட்களில் 3 முறை திண்டுக்கல்லில் இருந்தேன்!

இன்னா பிரியோஜனம் தமிழ்நாட்டில் போட்டி போட்ட பாஜக மாதிரி ஆனது பொழப்பு! பிரியாணி அண்டாவ தூக்கலாமுன்னு பார்த்தா அன்னிக்கு கடையே லீவுன்னாங்க! திண்டுக்கல்லில் தடுக்கி விழுந்தா இல்ல.. கொஞ்சம் ஓரமா ஒதுங்கினாலும் அங்கே ஒரு பிரியாணி கடை இருக்கும்! பொன்ராம், துளசிராம், வேணு, தலப்பா கட்டி, கீதா, வேலுன்னு ஊரு முழுக்க ஃபேமஸான 10 கடைகள் இருந்தா..

நம்ம தல தோனிக்கு கீழே ஆடி பெரிய ப்ளேயர் ஆகுற பயிற்சி எடுத்தா மாதிரி இந்தக் கடைகளில் சில ஆண்டுகள் வேலை பார்த்துட்டு தொழில் கத்துகிட்டவர்கள் போட்டது ஒரு 10 கடைகள் நிச்சயம் தேறும்! மொல்லாளி அந்த தொழில் ரகசியம் என்னன்னா இவர்கள் கற்றுக் கொண்ட வித்தையை கஸ்டமர்கள் பயன்பெறும்படி தருகின்ற காம்போ எல்லாம் அதகளமா இருக்கும்!

மட்டன் பிரியாணி, மாங்கா கூட்டு (ஆட்டு கிட்னி வித் கொழுப்புக் கறி) கரண்டி ஆம்லெட் இதெல்லாம் காம்போவில் கிடைக்கும்! பெரிய கடைகளில் இதெல்லாம் தனித்தனி சார்ஜ்! உதாரணமா அங்க ₹450 க்கு கிடைக்கிறது இங்க ₹300 க்கு கிடைக்கும்! பிரியாணி அளவும் கூட இருக்கும்! நிற்க! இத்தனை வசதி இருந்தும் 3 முறை நான் பிரியாணி சாப்பிடாததை நினைத்துப் பாருங்கள்!

அழுகை வருகிறதா? ஃபேஸ்புக்கில் உங்களை அழ வைத்த சம்பவம்னு டிரெண்டிங் வந்தா நிச்சயம் இதைக் குறிப்பிடுங்க! ஒகே உட்காருக! மீண்டும் திண்டுக்கல்.. முதல் முறை கடை லீவு, ஒரு முறை பிரியாணி தீர்ந்திடுச்சு,மூன்றாவது முறை மட்டன் பிரியாணி முடிஞ்சிருச்சுங்க எனும் துயரச் செய்தியுடன் 3 தோல்விகள்! இடையில் சீச்சீ இந்த திண்டுக்கல் புளிக்கும் என நத்தம்..

காவன்னா கடைக்கு சென்று பொரித்த பரோட்டாவை கொறித்தபடி பழிவாங்குவோம்னு போனா திண்டுக்கல்லிலாவது கடை இருந்து பிரியாணி இல்லைன்னு சொல்ல ஆள் இருந்தது! நத்தத்தில் சுத்த பத்தமாக கடையே மூடியிருந்தது! நத்தத்தில் போய் திண்டுக்கல் பூட்டை தரிசித்துவிட்டு வந்த ஒரே பெருமை அடியேன் எனக்கு மட்டுமே! இத்தனை துயர்களையும் அனுபவித்து துவண்டு கிடந்த..

எனக்கு இன்று எந்த பிரியாணி கடைகளுக்கும் லீவு இல்லை, மாலை 4 மணி வரை சூடான மட்டன் பிரியாணி கிடைக்கும், இன்னிக்கு நிறையா ஸ்பெஷல் சைடிஷ் கிடைக்கும்னு உழைப்பாளர் தினத்தன்று உவப்பு தரும் செய்திகள் வந்தன! இதற்கு பின்னும் உழைக்காமல் ஓய்வெடுப்பவன் மனிதனே இல்லை அல்லவா! காலை டிபனாக தட்டில் வைத்த 4 இட்லிகளில் மூன்றரை இட்லிகளை சாப்பிடாமல்..

வைத்துவிட்டு ஒரு சொம்பு நீரை மட்டும் குடித்துவிட்டு படாரென வண்டியேறினேன்! என் உடலின் ஒவ்வொரு நரம்பும் உழைப்பு உழைப்பு என துடித்தது.! அடுத்த 50ஆவது நிமிடத்தில் திண்டுக்கல் அடைந்து எந்தக் கடை என எண்ணி குழம்பி தெளிவதற்குள் வண்டி வேணு பிரியாணிக்கடை பக்கமாக செல்ல வாசலில் ஒரே ஃபேன்ஸி நம்பரில் 2 இங்க் ப்ளூ நிற ஆ(வ்)டி கார்கள் நின்று கொண்டிருக்க..

அதற்கு பக்கத்தில் பார்க் செய்தோம்! (அவை கடை முதலாளியின் வண்டிகளாம்) என்னங்க இப்போ வர்றிங்க கடை மதியம் 12 மணிக்கு தான் என்றார் அங்கிருந்தவர். மணி பார்த்தேன் காலை 10:35 அடடா இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டுட்டேனே என அசடு வழிந்து சரி நாம வந்த அலுவல் வேலையை முடிப்போம்னு போனா அந்த இடம் அடுத்த 2 தெரு தள்ளி இருந்தது. என் மனம் துள்ளி மகிழ்ந்தது.!

நடந்தே வந்துடலாம்! அவ்வளவு கிட்ட! மகிழ்வோடு போனால் அங்கு ஈவண்ட்டில் வேறு சில புதுப் பிரச்சனைகள் இருந்தன. அவற்றை எல்லாம் முடித்து கிளம்ப, மணி பார்த்தால் சரியாக மதியம் 12:50.. ஆஹா மதிய உணவுக்கு இதுவே அற்புதமான நேரம்! என்னும் மகிழ்வோடு வேணு பிரியாணி கடைக்கு வந்த்… அடேய்.. என்னங்கடா இது!! வாசலில் 30 கார்களுக்கும் மேல் அடைசலாக நின்றது!

செக்யூரிட்டிகள் 3 பேர் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருக்க.. கடைக்குள் பார்த்தேன் வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதிக்கு வந்த தரிசனக் கூட்டத்தை விட 10 மடங்கு கூட்டம்! சிலர் அவங்க குழந்தைகளை தோள் மீது உட்கார வைத்து இருந்தனர்! இந்தக் கூட்டத்தில் பலூன் வித்தா நல்ல வருமானம் வரும் இல்ல என்ற ஒரு வணிக யோசனை ஏனோ அபத்தமாக..

வந்து போனது! உழைப்பாளர் தினத்தன்று வேணு பிரியாணியில் உழைப்பதற்காக தேனி, கம்பம், மதுரை, திருச்சி, கரூர், ஏன் சென்னையர்களும் வந்திருந்தனர்! அதில் ஒருவ்ர் திருச்சியில் இருந்து கரூர் போக திண்டுக்கல் வந்திருந்தார்! அதுக்கு வழி இதில்லயே என்றதற்கு யோவ் பிரியாணி சாப்பிட வந்தேன்யா என்றவர் கண்ணில் வெறி தெரிந்தது! கள்ளழகரை காணவந்த கூட்டம் போல,

திரண்டு நின்ற கூட்டத்தில் எதிர்புறம் நீந்தி உள்ளே போனால் எல்லா டேபிள்களிலும் ஆட்கள்! அவங்க சேருக்கு பின்னாலும் ஆட்கள்! சாப்பிடுறவங்க பின்னாடி நின்னா சட்டப்படி தப்பாச்சே! புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவங்களைன்னு கத்தலாமுன்னு பார்த்தா மே 1 கோர்ட்டெல்லாம் லீவு என்பது நினைவுக்கு வந்தது! ஏசி ஹாலுக்கு வெளியே கையில் நோட் புக்கோடு பத்திரிக்கை நிருபர்..

போல 2 பேர் நின்று கொண்டிருக்க அவரைச் சுற்றி மேஷமலையை சுற்றி நிற்கும் பிரஸ் போல மக்கள் கூட்டம்! கந்தசாமி- மொத்தம் 6 பேரு, ஜான் - மொத்தம் 5 பேரு, கண்ணன் - மொத்தம் 9 பேரு அதில 3 குழந்தைங்க.. மக்கள் இப்படி அவரிடம் சொல்ல அவர் அதை நோட்டில் குறித்துக் கொண்டு இருந்தார்! அதாவது சாப்பிட வந்தவங்க மொத்தம் எத்தனை பேர்னு தெரிஞ்சி உள்ளே சொல்ல..

அங்கே இருக்கைகள் காலியானதும் இவங்கள உள்ளே அழைப்பாங்க என்பது புரிந்தது! 6 பேர் 8 பேர்னு சொன்னதை குறிச்சவரு எங்கிட்ட நீங்க சார் என்றார்! 2பேர் சார் என நான் எடப்பாடி போல 2 விரல் விரிக்க அவர் அதை தமிழக மக்கள் போல புறக்கணித்து சரி இருங்க என்றார்! நோட்டில் குறிக்கவில்லை! மணி 1:30 இந்தக் கூட்டம் உள்ளே போய் திரும்ப நிச்சயம் 3 மணி ஆகுமே என நினைத்தபோது,

என் கண்ணில் கண்ணீர்! காலையில் தின்ற அரை இட்லி எப்போதோ சீரணமாகியிருக்க, பசியால் வந்த கண்ணீர்! அதே நொடியில் சார் நீங்க உள்ள வாங்க என்னும் குரல் தேனாக வந்துப் பாய்ந்தது என் காதினிலே! அந்தக் கடையின் சூபர்வைசர் எனக்கு நன்கு தெரிந்தவர்! 2 பேர் என்றால் உடனே இடம் கிடைக்கும் நோட்டில் குறிக்க மாட்டார்கள் என்பது புரிந்தது, ஹால் உள்ளே நுழைந்ததும்..

தலை கால் புரியவில்லை. எலும்பு தால்ஸா, மட்டன் பிரியாணி, மாங்கா, கோலா உருண்டை, கரண்டி ஆம்லெட், சோறு, ரசம் என திவ்யமான சாப்பாடு! கடந்த 3 முறை ஏமாந்த எனக்கு ஏமாற்றமில்லா விருந்து அதுவும் மே தினத்தில் ஆஹா! முழு திருப்தியுடன் வாசலுக்கு வந்தால் அப்போது நான் பார்த்த அதே திருப்பதிக் கூட்டம் இன்னும் க(லை)ரையாமல் அப்படியே இருந்தது! சார் நீங்க தானே..

காலையில் எர்லியா வந்திங்க என்றார் கடையாள்! ஆமா நான் தாங்க! ஆமாண்ணே காலையில் இங்கே நின்னுதே அந்த 2 ஆ(வ்)டி ப்ளூ கார்களும் யாருது என்றேன்! அதுவா சார் எங்க முதலாளியோடது தான் என்றார்! ஓஹோ அதே ஃபேன்ஸி நம்பரில் இன்னும் 2 கார் அவர் வாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றேன் அந்த கூட்டத்தை பார்த்தபடி!! என்னங்க நான் சொன்னது சரிதானே!

ஏவ்வ்வ்வ்வ்வ்..

 #மேலூர்_சசிவருடம்1991...திருச்சி ரீஜனல் இன்ஜினியரிங் கல்லூரியின் ஃபெஸ்டெம்டர் கலைவிழா... தமிழகத்தின் அனைத்து கல்லுரிகளு...
07/05/2023

#மேலூர்_சசி

வருடம்1991...

திருச்சி ரீஜனல் இன்ஜினியரிங் கல்லூரியின் ஃபெஸ்டெம்டர் கலைவிழா... தமிழகத்தின் அனைத்து கல்லுரிகளும் கலந்து கொள்ளும் 3 நாள் திருவிழா.! வண்ணமயமாய் எங்கும் மாணவ மாணவிகள் சோகம், துன்பம் போன்றவை எல்லாம் அங்கு கிடையவே கிடையாது.. எங்கும் மகிழ்ச்சி உற்சாகம் ஆர்ப்பரிப்பு..

மாணவர்கள் தங்கும் விடுதியில் வெளியூர் மாணவர்கள் தங்க அனுமதித்திருந்தார்கள். எங்கள் செளராஷ்டிரா கல்லூரி நண்பர்களுடன் நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது.. எங்கள் ஆர்ப்பரிப்பையும் மீறி ஒரு பாட்டுச்சத்தம் தாளத்தோடு காற்றில் ஒலித்தது.. அருமையான கிராமியப்பாடல் அது..!

ஆவல் மேலிட நாங்கள் அனைவரும் பாட்டு வந்த திசை நோக்கி நகர்ந்தோம்.. பாடல் விடுதியின் மொட்டை மாடிக்கு அழைத்தது.. மேலேறினோம் அங்கு 10 மாணவர்கள் இருந்தனர் நடுவில் ஒருவர் அலுமினிய வாளியில் சுருதி சுத்தமாக தாளமிட்டுக் கொண்டிருக்க ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்..

அனைவரும் மதுரை மேலூர் கலைக்கல்லூரி மாணவர்கள்.. நாங்களும் மதுரை என்றதும் வெகு சீக்கிரம் நண்பர்கள் ஆனோம்.. அந்தக் கூட்டத்தில் அவ்வப்போது ஒருவர் அடித்த கமெண்ட்டுக்கு கண்ணில் நீர்வர சிரித்தோம்.. ஒன்றுமே தெரியாதது போல சிரிக்காமல் கமெண்ட் அடித்துவிட்டு அமைதியாக இருப்பார் அவர்..

அவர் பெயரைக் கேட்டோம் சசிக்குமார் என்றார்.. எனக்கு அப்போது தெரியாது இவன் தான் அடுத்த 28 வருடமும் (இன்று வரை - இனியும்) என்னுடன் இருக்கப்போகிறான் என்று.. அடுத்த சந்திப்பு 1992 ஆம் ஆண்டு மதுரை நகைச்சுவை மன்றத்தில்.. பிறகு காமெடி பாய்ஸ் கலைக்குழு..

அதன் பிறகு கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, பாட்டு தர்பார், ஒஸ்தி, வலைச்சிரிப்பு என இன்று வரை என்னுடன் இருப்பவன் சசி.. என் மனைவி பொறாமையாகச் சொல்லுவார்.. பேசாம நான் சசியா பொறந்து இருக்கலாம்னு.. அந்தளவு நாங்கள் சுற்றியிருக்கிறோம் ஜெயங்கொண்டம் முதல் ஜெர்மன் வரை...

என் காதல் திருமணத்திற்கு முதல் சாட்சி கையெழுத்து சசி தான் .. சசி இன்றைக்கு வடிவேலுவுக்கு இணையான திறமை கொண்டவன்.. ஆனால் சினிமாவுலகம் அவனை பயன்படுத்திக் கொள்ளவில்லை, எங்கள் இருவருக்கும் கருப்பசாமி குத்தகைதாரர் முதல் படம் அதிலும் நண்பர்கள் தான் (அந்த ஐயர் கேரக்டர் தான் சசி)

அதன் பிறகு மேடை நிகழ்ச்சிகளில் பிசியானதால் நடிக்க முடியவில்லை என்பான்.. சசி இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.. ஒரு இடத்துக்கு நான் போனேன் அவர் அங்கு இல்லை நான் வந்துவிட்டேன்.. இந்த மாதிரி ஒரு செய்தியை சசி சொல்லக் கேட்க வேண்டும்.. வயிறு புண்ணாகிவிடும் சிரித்து..

சம்பவங்களை அழகாக கோர்வையாக்கி நக்கல் நையாண்டியுடன் அவன் சொல்லும் பாங்கு அருமை.. அதே போல வளவள விஷயங்கள் பிடிக்காது.. 5 பக்க ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்தால் அதை 3 பக்கமாக எடிட் செய்துவிடுவான்.. அதன் சாராம்சம் குறையாமல்.. அதனாலேயே எங்கள் பல ஸ்கிரிப்ட்டுகள் வெற்றி பெற்றுள்ளன..

கொஞ்சம் நஞ்சமல்ல உலக சோம்பேறி அளப்பரிய அவன் ஆற்றல் அதனால் தான் வீணாகிறது என்பது என் எண்ணம். தற்போது இன்ஸ்டா யூடியூபிலும் வலம் வருகிறான்! அதிலும் மிகப்பெரிய சாதனைகள் பல புரிவான் என எண்ணுகிறேன் அதற்கான வாய்ப்புகள் வருவது தெரிகிறது உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு செய்தி

சசி ஒரு வழக்கறிஞன்..! இதெல்லாம் இன்னிக்கு ஏன் சொல்றேன்னா அவனுக்கு இன்னிக்கு பிறந்தநாள்..! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சசி.. உனக்கான இடம் கிடைத்து நீ சாதிக்க இந்த ஆருயிர் நண்பனின் வாழ்த்துகள்.. Happy Birthday Sasi Melur 🎂🎂🎂🍫🍫🍫🍫🍫❤️❤️❤️

 #வெங்கிஸ்_கிச்சன்🟡 மஷ்ரூம் ஸ்பைனாச் சீஸ் ஆம்லெட் 🟡 தேவையானவை : 4 பெரிய முட்டைகள், 1 கைப்பிடி பசலைக் கீரை, மெல்லியதாக வெ...
07/05/2023

#வெங்கிஸ்_கிச்சன்

🟡 மஷ்ரூம் ஸ்பைனாச் சீஸ் ஆம்லெட் 🟡

தேவையானவை : 4 பெரிய முட்டைகள், 1 கைப்பிடி பசலைக் கீரை, மெல்லியதாக வெட்டப்பட்ட 10 க்ரெமினி காளான்கள், 2 tbs ஆலிவ் எண்ணெய், 2 பெரிய வெங்காயம் நறுக்கியது, 1 டீஸ்பூன் பெப்பர், 1/2 கப் துண்டாக்கப்பட்ட க்ரூயர் சீஸ் அல்லது சுவிஸ் சீஸ், 2 tbs வெண்ணெய், 1 கைப்பிடி கொத்தமல்லித்தழை பொடியாக நுணுக்கி நறுக்கியது, உப்பு - தேவைக்கு

செய்முறை : பெரிய வாணலியில் ஆலிவ் எண்ணெயை MED-HIGH சூட்டில் சூடாக்கி அதில் காளான் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகவும் மென்மையாகவும் ஆகும்படி சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும். 1/4 டீஸ்பூன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து, இதில் கீரையை சேர்த்து அது நன்கு வதங்கி வரும் வரை கிளறவும்.

இந்த கீரை காளான் கலவையை வேறு தட்டுக்கு மாற்றி வாணலியைத் துடைத்துவிட்டு ஒரு கிண்ணத்தில் 1 tbs தண்ணீர் மற்றும் மீதமுள்ள உப்பு மற்றும் மிளகு சேர்த்து 4 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு நுரை வரும் வரை அடித்து கலக்கவும். துடைத்த வாணலியில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து மீண்டும் MED-LOW வெப்பத்தில்..

சூடாக்கவும். அடித்த முட்டைக் கலவையில் 3 அல்லது 4 ஆம்லெட்டுகள் போடலாம்! முதல் ஆம்லெட்டுக்கு முட்டைக் கலவையை ஊற்றி முட்டைகள் மேலே சிறிது பளபளப்பாக தெரியும் வரை சுமார் 2 நிமிடங்கள் சமைக்கவும்.ஆம்லெட்டின் ஒரு பாதியில் மட்டும் பரவலாக காளான் கலவையைச் சேர்த்து, பின்னர் சிறிது..

சீஸ் தூவி ஆம்லெட்டை காளான் மீது மடியுங்கள். 1 நிமிடம் கழித்து அல்லது சீஸ் உருகியதும் அதை எடுத்துவிடவும்! இதே போல மீதமுள்ள வெண்ணெய், முட்டைக் கலவை, காளான் கலவை மற்றும் சீஸ் கொண்டு ஆம்லெட் செய்யவும். மல்லித்தழை பெப்பர் தூவவும்! ருசியான மஷ்ரூம் ஸ்பைனாச் சீஸ் ஆம்லெட் சாப்பிடத் தயார்!

இந்த ஆம்லெட்டில் காளான் கலவையை சரி பாதியாக வைத்தால் போதும் பாதி ஆம்லெட்டை இதன் மீது மடித்தால் இரண்டுக்கும் நடுவில் சாண்ட்விச் போல காளான் மசாலா இருக்கும்! கிட்டத்தட்ட இது சாண்ட்விச் போலத்தான்! (படத்தில் பார்க்கவும்)

 #ரவா_அவா🟣 ☁️”ரவா இனிப்புக் கொழுக்கட்டை"☁️ 🟣 (ரவை அளவு எந்த கப்போ அதே அளவு கப் தான் வெல்லம், மைதா § தேங்காய் துருவலுக்கு...
06/05/2023

#ரவா_அவா

🟣 ☁️”ரவா இனிப்புக் கொழுக்கட்டை"☁️ 🟣

(ரவை அளவு எந்த கப்போ அதே அளவு கப் தான் வெல்லம், மைதா § தேங்காய் துருவலுக்கும்)

தேவையானவை : ரவை - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், மைதா - 1/4 கப், ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன், நெய் - 1 tbs, தேங்காய் துருவல் - 1/2 கப், தூள் முந்திரி - 1 tbs, உப்பு & ஆயில் - தேவையான அளவு.

செய்முறை : வாணலியில் 1 tbs நெய் விட்டு சூடானதும் ரவையை ஓரிரு நிமிடம் நன்கு மணக்க வறுத்து அதை பொடிக்கவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சி கட்டி தட்டாது வடிகட்டி கொள்ளவும். (பாகு பதம் தேவையில்லை)

ஒரு கிண்ணத்தில் பொடித்த ரவை, தூள் முந்திரி, மைதா, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், உப்பு, சிறிது ஆயில், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். கைகளில் ஆயில் தடவிக் கொண்டு பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கைகளால் உருண்டை கொழுக்கட்டை பிடிக்கவும்.

பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லிப் பானையில் வைத்து 15 நிமிடம் வேக விட்டு எடுத்து பரிமாறவும். இதை பிடி கொழுக்கட்டை போலவும் பிடிக்கலாம்!

சூப்பரான ருசியில் சுவையான இனிப்பு ரவா கொழுக்கட்டை தயார்! துருவிய தேங்காய் அல்லது சிறு சிறு தேங்காய் சில்லுகளாகவும் சேர்க்கலாம்!

 #வெங்கிஸ்_கிச்சன்🔴🟡 ஒயாகோடோன் 🟡🔴 (ஜப்பான் சிக்கன் எக் ரைஸ்) தேவையானவை : சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட தோல் இல்லாத எலும்பு...
06/05/2023

#வெங்கிஸ்_கிச்சன்

🔴🟡 ஒயாகோடோன் 🟡🔴 (ஜப்பான் சிக்கன் எக் ரைஸ்)

தேவையானவை : சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட தோல் இல்லாத எலும்பு இல்லாத கோழி தொடை இறைச்சி - 150 கிராம், பெரிய முட்டைகள் - 2, நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, சிக்கன் ஸ்டாக் - 150 மிலி, சோயா சாஸ் - 1 tbs, மிரின் (அரிசி ஒயின்)- 1tbs, சர்க்கரை - 1 டீஸ்பூன், சமைத்த சோறு - 200கிராம், சில்லி ப்ளேக் - 1 டீஸ்பூன், நோரி (கடல் பாசி) - 1 டீஸ்பூன்.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் வெட்டிய சிக்கன், சோயா சாஸ், மிரின் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் தனியே வைக்கவும். ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதை நுரைக்காது மென்மையாக அடித்து கலக்கவும். ஒரு சிறிய கடாயில், மிதமான தீயில் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி..

கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை 1 நிமிடம் சமைக்கவும். இப்போது கோழிக் கலவையைச் சேர்த்து, ஒவ்வொரு பக்கமும் வேகும்படி சுமார் 2-4 நிமிடங்கள் சமைக்கவும் கோழி கிட்டத்தட்ட வெந்ததும் முட்டைக் கலவையை கடாயில் சமமாக ஊற்றி பரவலாக அதை கலந்துவிட்டு

சில நொடிகள் சமைக்கவும். முட்டைகளை லேசாகக் கிளறி நன்கு அவை வெந்ததும் சமைத்த சாதத்தை இதில் போட்டு நன்கு ஒரு நிமிடம் கிளறி இறக்கிவிடவும். இந்த சாதத்தின் மீது சில்லி ப்ளேக் & நோரி தூவி பரிமாறவும்! ஜப்பான் நாட்டின் புகழ் பெற்ற சிக்கன் முட்டை எக் ரைஸ் இது. இதில் மஷ்ரூம் சேர்த்தும் சமைக்கலாம்!

சாதத்தை சேர்த்த பின்பு ஃப்ரைடு ரைஸ் போல வறுக்க வேண்டுமெனில் பாதி வெந்த சோறாக சேர்க்கவும்! நன்கு வெந்த சோறு எனில் முட்டை சிக்கனுடன் சேரும் போது குழைந்து விடும்! அரிசி ஒயின் இல்லாவிட்டால் ஒயிட் ஒயின் சேர்த்து சமைக்கவும்.

நோரி, மிரின் போன்றவையில் சமைத்தால் பாரம்பரிய ருசி கிடைக்கும். அது இல்லாவிட்டால் நம்ம ஊர் மிளகாய் தூள், ஃப்ரைடு ரைஸ் மசாலா தூள்களை பயன்படுத்தலாம்! உங்கள் வீட்டில் இந்த ரைஸை சமைத்து ருசித்துவிட்டு சொல்லுங்க!

#அக்கரைச்_சமையல்

 #வெங்கிஸ்_கிச்சன்🟢 முட்டைகோஸ் ஆனியன் பராட்டா 🟢 தேவையானவை : கோதுமை மாவு - 300 கிராம், நறுக்கிய பெரிய வெங்காயம் -1, நறுக்...
05/05/2023

#வெங்கிஸ்_கிச்சன்

🟢 முட்டைகோஸ் ஆனியன் பராட்டா 🟢

தேவையானவை : கோதுமை மாவு - 300 கிராம், நறுக்கிய பெரிய வெங்காயம் -1, நறுக்கிய முட்டைகோஸ் - 1 கை நிறைய, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது -2, துருவிய இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு, எண்ணெய் - 2 tbs, வரமிளகாய் - 2, சீரகம் - ½ டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, மல்லித் தூள் - ½ டீஸ்பூன், கரம் மசாலா - ¼ டீஸ்பூன், சீரகத் தூள் - ½ டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை : ஒரு நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெயை சூடாக்கவும். வரமிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கி அது பொரிந்ததும் 1 சிட்டிகை பெருங்காயம் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்க்கவும். இதில் ஒரு சிட்டிகை உப்பு தூவி வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு இதில்..

துருவிய முட்டைக்கோஸ் மற்றும் மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு (வெங்காயத்தில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துள்ளோம். எனவே பார்த்து உப்பு சேர்க்கவும்) இதனை முட்டைக்கோஸ் வேகும் வரை நன்கு வதக்கவும். அனைத்தும் நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி தனியாக வைக்கவும்.

ஒரு பரந்த கிண்ணத்தில், முழு கோதுமை மாவு மற்றும் உப்பு ஒரு சிட்டிகை போட்டு அதில் முட்டைக்கோஸ்-வெங்காய கலவையைச் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும், மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து அதை சப்பாத்தி தேய்ப்பது போல வட்டமாகத் தேய்த்து உருட்டவும்.

ஒரு தவா/ தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த பராட்டாவை வைத்து சுற்றிலும் சிறிது எண்ணெயைப் பயன்படுத்தி இருபுறமும் பொன்னிறப் புள்ளிகள் தோன்றும் வரை வார்த்து எடுக்கவும்! ருசியான முட்டைகோஸ் ஆனியன் பராட்டா ரெடி! வெள்ளரி & தயிர் பச்சடி/ சட்னி/ சாஸ்/ ஊறுகாயுடன் சூடாகப் பரிமாறவும்.

இதனை நீங்கள் ஸ்டப்டு பராட்டாவாகவும் செய்யலாம்! முட்டை கோஸ், வெங்காயம் போல காளான், பனீர் உருளைக் கிழங்கு போன்றவற்றையும் துருவிப் போட்டு பராட்டா செய்யலாம்.

ஒரு கப் தயிரில் காராபூந்தியை ஊற வைத்து மேலே 1 சிட்டிகை மிளகாய்/சாட்/ அம்சூர் தூள் தூவி இதற்கு தொட்டுக் கொள்ளலாம்! குருமா அவசியமே இல்லை வெறும் ரைத்தாக்கள் போதும்.

தயிரில் துருவிய காரட், வெள்ளரி, வெண் பூசணி, வெங்காயம் என தனித்தனி ரைத்தாவாகவோ அல்லது இவை அனைத்தும் ஒன்றாக போட்ட மிக்ஸ்டு ரைத்தாவாகவோ பயன்படுத்தலாம்!

 #வெங்கிஸ்_கிச்சன்🔴 இறால் பருப்பு வடை 🔴தேவையானவை : சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கிய இறால் - 1/4கிலோ, சுத்தம் செய்த...
30/04/2023

#வெங்கிஸ்_கிச்சன்

🔴 இறால் பருப்பு வடை 🔴

தேவையானவை : சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கிய இறால் - 1/4கிலோ, சுத்தம் செய்து நறுக்காத முழு இறால் - 10, கடலை பருப்பு - 200 கிராம், நறுக்கிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் -3, கறிவேப்பிலை & மல்லித் தழை - சிறிதளவு, சோம்பு - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கு

செய்முறை : கடலை பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைத்து ஒன்றிரண்டாக கரகரப்பாக அரைத்து வைக்கவும்! ஒரு ஃப்ரை பானில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு சூடானதும் சோம்பு நறுக்கி வைத்த வெங்காயத்தில் இருந்து 1 ஸ்பூன் வெங்காயம் சிறிது பச்சை மிளகாய் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

ஓரளவு வதங்கிய பின் வெட்டி வைத்த இறாலை இதில் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வதக்கவும்! இறாலில் இருந்து பிரிந்த நீரை சேர்க்காமல் வறுத்த கலவையை எடுத்து ஆற வைக்கவும்! ஒரு கிண்ணத்தில் அரைத்த பருப்பு மீதமுள்ள வெங்காயம், மிளகாய்..

இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை மல்லி வடைக்கு தேவையான உப்பு & வதக்கிய இறால் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசையவும்! நறுக்காத சில முழு இறால்களை மட்டும் ஒரு தட்டில் தனியே வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெப்பத்தை மிதமாக வைக்கவும். வடைக் கலவையை..

மசால் வடை செய்வது போல தட்டி ஒவ்வொரு வடையின் நடுவிலும் 1 முழு இறாலை வைத்து வடையில் ஒட்டும்படி மெதுவாக அழுத்தவும். சூடான எண்ணெயில் வடையை மெதுவாக போட்டு இருபுறமும் மொறு மொறுப்பாகவும் பொன்னிறமாகவும் இருக்கும்படி பொரித்து எடுத்து ஆயில் வடிகட்டியில் போடவும்!

ருசியான இறால் பருப்பு வடை ரெடி! சாஸ், சட்னி எதுவுமே தேவைப்படாத சூப்பர் சிற்றுண்டி இது! இதை நாம் எல்லா வகையான சோற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்!

குறிப்பு : எப்போதும் இறாலை பச்சையாக மாவில் சேர்க்கக் கூடாது வதக்கிய பின்பு சேர்த்தால் தான் ருசியாக இருக்கும்.

இறால் வதக்கும் போது சேர்க்கும் சிறிது வெங்காயம் & பச்சை மிளகாயைத் தவிர மிச்ச வெங்காயம் மிளகாயை பச்சையாகவே மாவில் சேர்க்கவும்!

இறால் வதக்கிய நீரை நிச்சயம் வடையில் சேர்க்கக்கூடாது!

4 -5 வடை பொரிக்கும் அளவு வடை சட்டியில் ஆயில் ஊற்றி அதிலேயே எல்லா வடைகளையும் பொரிக்கவும்.

அடுப்பு மிதமாக எரிய வேண்டும் வடையை திருப்பித் திருப்பி எல்லா புறமும் ஒரே நிறம் வரும் வரை நிதானமாக சமைக்கவும்.

 #வெங்கிஸ்_கிச்சன்🔴 ஸ்பெஷல் ஈரல் குழம்பு 🔴 தேவையானவை : 500 கிராம் ஆட்டு ஈரல் துண்டுகளாக, 2 பெரிய வெங்காயம் நறுக்கியது அல...
30/04/2023

#வெங்கிஸ்_கிச்சன்

🔴 ஸ்பெஷல் ஈரல் குழம்பு 🔴

தேவையானவை : 500 கிராம் ஆட்டு ஈரல் துண்டுகளாக, 2 பெரிய வெங்காயம் நறுக்கியது அல்லது அதற்கு சமமான அளவு சின்ன வெங்காயம் நறுக்கியது, 1 தக்காளி, 2 tbs ஆயில், 2 tbs நல்லெண்ணெய், ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 முதல் 2 ½ tbs இஞ்சி பூண்டு விழுது, 4 tbs மல்லித் தூள், 1 tbs மிளகாய் தூள், உப்பு - தேவைக்கு.

மசாலாவிற்கு : 2 ஏலக்காய், 3 கிராம்பு, 1 ஜாதிபத்திரி, 1 நட்சத்திர சோம்பு, ½ அங்குல பட்டை

அரைக்க : தேங்காய் விழுது 2 முதல் 2 ½ tbs துருவிய தேங்காய், 1 பிரியாணி இலை, 4 மிளகு, ½ தேக்கரண்டி சோம்பு, 6 முழு முந்திரி

செய்முறை : வெந்நீர் மற்றும் மஞ்சள் கொண்டு கல்லீரலை நன்கு கழுவவும், வெங்காயம், தக்காளியை நறுக்கவும். ஒரு குக்கரில் எண்ணெயை சூடாக்கி, அதில் ஜாதி பத்திரி, நட்சத்திர சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய் ஆகியவற்றை மிதமான தீயில் வாசனையாக வதக்கவும். பிறகு இதில் வெங்காயத்தை சேர்த்து..

வதக்கவும்.வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து குழைத்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும், ஈரல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஈரல் அதன் நிறம் மாறும் வறுக்கவும். மாறியதும் ஈரல் மூழ்கும்படி தண்ணீரைச் சேர்த்து..

தீயை சற்று அதிகப்படுத்தி 3 விசில் வரை வேகவைக்கவும். இந்த நேரத்தில் துருவிய தேங்காய், முந்திரி, பிரியாணி இலை, மிளகு, சோம்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். பிறகு குக்கரில் பிரஷர் போனதும் சமைத்த லிவர் கிரேவியில் இந்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதித்ததும்..

ஈரல் நன்கு வெந்ததை சரிபார்த்து உப்பு பார்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். அருமையான ஈரல் குழம்பு ரெடி! சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா, ஆப்பம், இடியாப்பம் என எதற்கும் அருமையான காம்போ! கூடுதல் ருசிக்கு கடைசியில் குழம்பில் சிறிது கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்தும் கொட்டலாம்!

 #வெங்கிஸ்_கிச்சன்🟡 மசாலா முட்டை ஃப்ரை 🟡 தேவையானவை : 6-8 வேகவைத்த முட்டைகள், 1.5 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மல்...
30/04/2023

#வெங்கிஸ்_கிச்சன்

🟡 மசாலா முட்டை ஃப்ரை 🟡

தேவையானவை : 6-8 வேகவைத்த முட்டைகள், 1.5 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மல்லித் தூள், 1.5 டீஸ்பூன் மிளகு தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 tbs நெய் அல்லது வெண்ணெய், உப்பு - தேவைக்கு. {மல்லி, மிளகாய், மிளகுத் தூள்கள் மூன்றிற்கும் பதில் ஒரு tbs SHD MASALA சாம்பார் பொடியும் சேர்க்கலாம்}

செய்முறை: விரும்பினால், வேகவைத்த முட்டைகளை பாதியாக வெட்டுங்கள். மற்றபடி முட்டையை முழுவதுமாகவே போடலாம். நெய்/ வெண்ணெய்யை சூடாக்கி மல்லி/ மிளகாய் / மிளகு/ மஞ்சள் தூள்கள் உப்பு(ஆப்ஷன் சாம்பார் பொடி) அனைத்தையும் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். இந்த மசாலாவை சமைக்கும் போது..

வரும் நெடி உங்களை தும்மச் செய்யலாம். மசாலா வெந்ததும் (தோராயமாக 30 வினாடிகள் அல்லது அதற்கு மேல்) அவித்த முட்டைகளைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் நெய் சேர்க்கவும். மசாலாக்கள் முட்டையில் நன்கு கலக்கும்படி பக்கங்களை திருப்பி 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.

இதற்கு மாற்றாக நீங்கள் மசாலாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யலாம். முட்டைகளை அதனுடன் சேர்து பிரட்டி முட்டைகளை ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்களுக்கு சமைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்! கார சாரமான மணமணக்கும் மசாலா முட்டை ஃப்ரை ரெடி! இதனை நீங்கள்..

சூடான சோற்றுடன் பரிமாறுங்கள்! சோற்றுடன் நாம் பிசைந்து சாப்பிடும் பருப்பு, சாம்பார், ரசம் மோர்க்குழம்பு, தயிர் என எல்லா சோறுகளுக்கும் அல்டிமேட்டான ஜோடி இந்த மசாலா முட்டை ஃப்ரை. வீட்டில் அசைவ விருந்துக்கு சமைத்தால் இதையும் ஒரு மெனுவாக்கி அதில் பரிமாறவும் அந்த விருந்து சிறக்கும்!

(இதில் தாளிப்பு சேர்ப்பது உங்கள் விருப்பம். முழு முட்டை போட்டால் 4 டூத் பிக் குச்சியை வரிசையாகப் பிடித்து ஒவ்வொரு முட்டை முழுவதும் நிறைய துளைகள் இடவும். அவித்த முட்டையை வதக்க நெய் அல்லது வெண்ணெய் மட்டுமே பயன்படுத்தவும். மசாலாக் கலவை சீராகப் பரந்து முட்டையில் பிடிக்கும். நல்ல மணமும் இருக்கும், எண்ணெய்யில் இந்தளவு ருசி வராது)

 #வெங்கிஸ்_கிச்சன்🟢 மூங்லெட் 🟢தேவையானவை : பாசிப் பருப்பு - 250 கிராம்,வெண்ணெய் -3 tbs, பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய்...
30/04/2023

#வெங்கிஸ்_கிச்சன்

🟢 மூங்லெட் 🟢

தேவையானவை : பாசிப் பருப்பு - 250 கிராம்,வெண்ணெய் -3 tbs, பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் -2, நறுக்கிய குடை மிளகாய் - 2tbs, துருவிய கேரட் - 2tbs, மல்லித் தழைகள் - 1கைப்பிடி, ஈனோ ¼ டீஸ்பூன் (அ) ¼ டீஸ்பூன் சமையல் சோடா, பெருங்காயம் - ¼ டீஸ்பூன், மேலே தூவ சுறிது சாட் மசாலா, வெந்தயம் -4, உப்பு - தேவைக்கு.

செய்முறை : வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், கேரட், மல்லித் தழைகள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப் பருப்பை வெந்தயத்தோடு 1-2 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். பிறகு அதிக தண்ணீர் இல்லாமல் நறநறப்பாக அடைமாவு போல அரைக்கவும். பிறகு அரைத்த மாவில் ஈனோ சேர்த்து கலக்கி 10 நிமிடங்கள் தனியே வைக்கவும்!

10 நிமிடத்திற்கு பின்னர் தேவையான உப்பு, நறுக்கப்பட்ட காய்கள் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு அடி கனமான தோசைக் கல்லில்1 ஸ்பூன் வெண்ணெய் தடவி சூடாக்கவும். அடுப்பை நடுத்தர வெப்பத்தில் வைத்து கல்லில் மாவை அடை போல வார்க்கவும். சுற்றிலும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு இதை மூடவும். ஒரு புறம் வெந்த பின்பு உடையாது கவனமாக பிரட்டவும்.

பிரட்டியதும் அடையின் மேற்புறத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் தடவி அடையை சுற்றி ஒரு ஸ்பூன் வெண்ணெய்யை ஊற்றவும். இருபுறமும் பொன்னிறமாகவும், மிருதுவாகவும் வந்ததும் உடனடியாக எடுத்து சூடாகப் பரிமாறவும். அற்புத ருசியில் மூங்லெட் தயார்! புதினா சட்னி இதற்கு நல்ல இணை தேங்காய் சட்னியும் நன்றாக இருக்கும்! மிகவும் சத்தானதும் கூட!

குறிப்புகள் : ஊற வைத்த பருப்பை 5 -6 மணிநேரம் வைத்திருந்து புளிக்கவிட்டால் மூங்லெட் இன்னும் ருசியாக இருக்கும்! குடை மிளகாய் கிடைக்காவிட்டால் பருப்பை ஊற வைக்கும் போது 2 வரமீளகாய் சேர்த்து ஊற வைத்து அரைக்கவும். கூடுதல் ருசிக்கு அரைத்த மாவில் மிளகு, முந்திரி, நிலக்கடலை, தேங்காய் துண்டுகள் போன்ற வற்றை சேர்க்கலாம். முருங்கை இலைகளை சேர்ப்பது இன்னும் பிரமாதமாக இருக்கும். துருவிய பீட்ரூட் கூட சேர்க்கலாம். வெண்ணெய் இல்லாவிட்டால் நெய் பயன்படுத்தவும்!

 #வெங்கிஸ்_கிச்சன்🔴 Thailand Coconut Milk Lime Chicken 🔴 தேவையானவை : 3 tbs ஆலிவ் எண்ணெய் - (அ)உங்கள் விருப்பமான சமையல் எ...
30/04/2023

#வெங்கிஸ்_கிச்சன்

🔴 Thailand Coconut Milk Lime Chicken 🔴

தேவையானவை : 3 tbs ஆலிவ் எண்ணெய் - (அ)உங்கள் விருப்பமான சமையல் எண்ணெய், எலும்பு இல்லாத தோல் இல்லாத கோழி மார்புக்கறி - 600 கிராம் (4 -5 பெரிய துண்டுகள்), 1/2 கப் நறுக்கிய வெங்காயம், 3 பல் பூண்டு - நறுக்கியது, 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி, 1 சிவப்பு பச்சை மிளகாய் - மெல்லியதாக வெட்டப்பட்டது,2 டீஸ்பூன் துருவிய எலுமிச்சை தோல் கெட்டியான தேங்காய் பால் - 500 மிலி, 1 டீஸ்பூன் மீன்/சோயா சாஸ், 2tbs எலுமிச்சை சாறு, 1/4 கப் நறுக்கிய மல்லித் தழை &புதினா, சிக்கனோடு பரிமாறுவதற்கு வட்டமாக நறுக்கப்பட்ட எலுமிச்சை துண்டு -6, உப்பு - தேவைக்கு.

செய்முறை : ஒரு வாணலியை மிதமான சூட்டில் சூடுபடுத்தி 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து அது நன்கு சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு 2 புறமும் கோல்டன் பிரவுன் நிறமாக இருக்கும் வரை, ஒரு பக்கத்திற்கு 2-3 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் கடாயில் இருந்து சிக்கனை எடுத்து தனியாக வைக்கவும்.

வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியுடன் மீதமுள்ள எண்ணெயை வாணலியில் சேர்க்கவும். வெப்பத்தை நடுத்தரமாக வைத்து வெங்காயம் மென்மையாகி லேசாக பழுப்பு நிறமாகும்படி 4-5 நிமிடங்கள் வரை அடிக்கடி கிளறி சமைக்கவும்.அடுத்து மிளகாய், துருவிய எலுமிச்சை தோல், தேங்காய் பால் சேர்க்கவும்.

சாஸை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வரும் வரை ஒரு மர கரண்டியால் அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கொதி வந்ததும் வெப்பத்தை குறைத்து, பொரித்த சிக்கனை இதில் சேர்க்கவும். சுமார் 8-10 நிமிடங்கள் ஒருபுறம் சமைக்கவும், பின்னர் மறுபுறம் திருப்பி மேலும் 6-10 நிமிடங்கள் சமைக்கவும்.

சிக்கன் வேகும் நேரம் முழுவதும் அடுப்பு குறைந்த தீயிலேயே இருக்கவேண்டும்! இந்த சிக்கன் வெந்ததும், மீன்/ சோயா சாஸ், எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கிளறி, உப்பு சேர்க்கவும். நறுக்கிய மல்லி புதினா தழைகள் மேலே தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். ருசியான “தாய் தேங்காய் லெமன் சிக்கன்” ரெடி!

சாதத்துடன் பரிமாறவும்! வெட்டிய எலுமிச்சை துண்டுகளோடு வேகவைத்த காரட், பீன்ஸ், ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு போன்றவற்றை இதற்கு இணையாக வைத்துக் கொள்ளவும்! இனிப்பும் புளிப்பு கலந்த சுவை ரொட்டிகளுக்கும் நன்றாக இருக்கும்! ஆனால் சாதத்துடன் பரிமாறுவதே தாய் ஸ்டைல்!

எலும்புகள் இல்லாத கோழி மார்பு, அல்லது தொடைக் கறிகளை பயன்படுத்தலாம்! தேங்காய் பால் இல்லாதவர்கள் தேங்காய் க்ரீமை பயன்படுத்தலாம்! சிவப்பு மிளகாய் என்பது..

நமது பச்சை மிளகாய் போன்ற தாய் சில்லி எனும் மிளகாய். அது கிடைக்காவிட்டால் பச்சை மிளகாய் பயன்படுத்தவும்! மீன் சாஸ் சேர்த்தால் பாரம்பரிய தாய்லாந்து ருசி கிடைக்கும்!

அது இல்லாதவர்கள் சோயா சாஸ் சேர்க்கவும்! அவகோடா எனும் வெண்ணெய்ப்பழ எண்ணெய்யில் சமைப்பது தான் தாய் ஸ்டைல்! முடிந்தால் அந்த எண்ணெய்யில் சமைக்கவும்.

Address

Madurai
625017

Alerts

Be the first to know and let us send you an email when Venkatesh / Artist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Venkatesh / Artist:

Share