14/05/2021
இன்னொரு சிறு குறிப்பு!
இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில், (குறிப்பாக மன்னார், யாழ்ப்பாணம், தீவகப் பகுதிகளில்) விவசாய நிலங்களை விடவும் அதிகமாக மன்னாரில் இருந்து தீவகம் வரையும் உள்ள கரையோரப் பகுதிகள் பூராவும் இந்தியன் முள்ச் செடிகள் அடர்ந்து சிறைப்பிடித்து வைத்திருக்கின்றன. 2009 யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு மீள்குடியேறிய மக்கள் தத்தமது காணிகளுக்குள் வளர்ந்திருந்த இந்த விஷச் செடிகளை அகற்றினார்களே தவிர கடற்கரையோரங்களில், அரச நிலங்களில் அடைத்து நின்ற மரங்களை அதிகம் அகற்றவில்லை. அவற்றை வெட்டி அகற்றுவதற்கான வெட்டுத் தளபாடங்கள் மக்களிடம் இல்லை.
தத்தமது காணிகளுக்குள் நிற்கும் இந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும், அல்லது தண்டனைக்குரிய குற்றம் என்று அரசாங்கம் சட்டம் போட்டிருக்கிறது. சரி, நல்ல சட்டம்தான். ஆனால் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் அடைத்து நிற்கும் இந்த விஷ மரங்களை வெட்டி அகற்றாமல் இருப்பதற்க்கு யாருக்குத் தண்டனை கொடுப்பதாம்.
ச்சுனாமியின் பெயரைச் சொல்லி மீனவர்களை கடற்கரைகளை விட்டு அப்புறப் படுத்தினார்கள்.
மீனவர்களுக்குச் சொந்தமான கடற்கரைகளைச் சட்டம் போட்டு அவர்களை அந்நியப் படுத்தி, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கடற்கரைகளைப் பட்டா போட்டு வைத்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் கடற்கரைகள் மிகவும் பாதுகாப்பானதாகவும், தூய்மையாகவும் இருந்தது. மீனவர்கள் கரைகளை மிகப் பக்குவமாகப் பாது காத்தனர்.
பருவகாலத் தொழில்களைச் செய்வதற்காக தீவகத்திலிருந்து புத்தளம் வரையிலும் தாம் விரும்பிய கரைகளில் தற்காலிக வாடிகளை அமைத்துத் தொழில் செய்து வந்தனர். எந்தக் கேடும் கரைகளுக்கு அவர்களால் நேர்ந்ததில்லை. மாறாக கடற்கரைச் சூழல்களைப் பாதுகாத்து வந்தனர். சட்டவிரோதத் தொழில்களை யாரும் செய்யாதபடிக்கு தமக்குள் தாமே கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வந்தனர்.
சர்வதேசக் கடற் கொள்ளை முதலாளிகளுக்கு தமிழக கடற்கரைகளைத் தாரைவார்க்க இந்தியா பல பன்நாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, தமிழக மீனவரகளைக் கூண்டோடு அழிக்கச் செயற்பட்டு வருவதுபோல் இலங்கையும் செயற்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான் ஆனாலும் எல்லாத் தரப்புமே ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்பதுதான் இன்னமும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும் சுமார்
அதேவேளை கடந்த ஒருவருட காலமாக மன்னா சிலாவத்துறையிலிருந்து அரிப்புத்துறை, வங்காலை, தலைமன்னார், பேசாலை, நாச்சிக்குடா, பள்ளிக்குடா, வலைப்பாடு, கவுதாரிமுனை, வேலியடி, மண்ணித்தரை, கல்முனை, தீவகம் என கரைநீளம் பயணப்பட்டபோது நான் அவதானித்தவை மனதுக்குப் பெரும் அதிர்ச்சியையும், அயர்ச்சியையும் தந்தன.
இந்தக் கரைகள்தான் அதிகமான பெருமண்ற் பரப்புக்களையும், கனிம வளங்களையும் கொண்ட கரைகளாகும். இந்தக் கடற் பரப்புக்கள்தான் இலங்கைத் தீவின் அதிகமான கண்டமேடைகளையும், பெருவாரியான கடல்வாழ் உயிரிகளின் வாழ்விடங்களாகவும் அமைந்தவைகளாகும்.
இந்தக் கரைகளில்தான் இப்போ அதிகமான இந்தியன் முட்செடிகள் அடர்த்தியாகப் பரந்து காணப் படுகிறது.
மேற்சொன்ன கரையோரப் பிரதேசங்களில் பெரும்பான்மையாகக் கத்தோலிக்க மீனவர்களே செறிந்து வாழ்கிறார்கள். ஆக, இந்தப் பிரதேசங்களில்தான் தமிழ்ப்பகுதிகளுக்கான கத்தோலிக்க திருச்சபை அதிகமான கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டிருக்கிறது. கோயில்களைக் கட்ட ஊக்கப் படுத்தும் இந்தக் கத்தோலிக்கம் இதே இளம் சமூகத்தினரைக் கொண்டு அந்தந்தக் கிராமத்துக் கரையோரங்களிலுள்ள இந்த முட் புதர்களை ஒருசில தினங்களுக்குள்ளேயே சிரமதானப் பணிகள் மூலம் இல்லாமல் ஒழிக்க முடியாதா? நிச்சயம் முடியும். அல்லது அந்தந்தப் பிரதேச சபைகளின் உதவிகள், அனுசரணைகளுடன் இந்தப் பணிகளை நிச்சயம் செய்ய முடியும். ஆனால் அப்படிச் செயற்பட்டதாக இதுவரை நானறியேன்.
கடந்த பிரதேச சபைகளுக்கான தேர்தல்ப் பிரச்சாரங்களில் தமிழ்க் கட்சிகள் தாம் செயற்படுத்துவதாகச் சத்தியம் செய்து வெளியிட்ட அறிக்கைகளை இவ்விடத்தில் மக்கள் ஒருதடவை ஞாபகப் படுத்திப் பார்ப்பது நல்லது.
நன்றி:
கட்டுரையாக்கம், புகைப்படம்
(Thamayanthi Simon 2018)